சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரையில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மக்களுக்கான ரேசன் அரிசியை முறைகேடாக நலத்திட்ட உதவியாக வழங்கியதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.R. தங்கப்பாண்டி மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. அரசு வழங்கும் இலவச அரிசியை தங்களின் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும்.
விநியோகிக்கப்பட்ட பைகளில் துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேசன் அரிசி இருந்ததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அரிசியைப் பறிமுதல் செய்து ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனவே, புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, உரிய விசாரணை நடத்தி, புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.