தமிழக செய்திகள்

குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு 'சீல்' உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை

குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது.

சென்னையில் குட்கா உள்ளிட்ட போதையூட்டும் வஸ்துகளை விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக இந்த சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன. சென்னை புரசைவாக்கத்தில் குட்கா விற்பனை நடப்பதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் மற்றும் நியமன அதிகாரி உத்தரவின் பேரில் அதிகாரிகள் என்.ராஜா உள்ளடங்கிய குழுவினர் புரசைவாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுந்தரம் தெருவில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடைக்கு ஏற்கனவே 3 தடவை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல சூளை நெடுஞ்சாலையிலும் சில கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனையில் 5 கிலோ அளவிலான குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வோரை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். எனவே திடீர் ஆய்வுகள் இனி அடிக்கடி மேற்கொள்ளப்படும்' என்றனர்.

SCROLL FOR NEXT