தமிழக செய்திகள்

நடிகை கவுதமியின் நிலம் விற்பனையில் மோசடி; 4 பேர் கைது

நடிகை கவுதமிக்கு சொந்தமான ரூ.26 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர் அழகப்பன், அவரது குடும்பத்தினரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை,

நடிகை கவுதமிக்கு சொந்தமான 26 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்தது தொடர்பாக, அவரது நண்பர் அழகப்பன் (வயது 66) மற்றும் அவரது குடும்பத்தினர் என 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை போலீசில் நடிகை கவுதமி(58) கடந்த 2023-ம் ஆண்டு புகார் அளித்தார். அந்த புகார் விவரம் பின்வருமாறு:

சிவகங்கை மாவட்டம், கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், அவரது குடும்பத்தினருடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். எனக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவும், மகளின் எதிர்கால படிப்புக்காகவும் அந்த நிலத்தை விற்க முடிவு செய்தேன். அது பற்றி, என் குடும்ப நண்பரான அழகப்பனிடம் தெரிவித்தேன். அவர் தன் பெயருக்கு பொது அதிகார பத்திரம் பெற்றார்.

பணம் மோசடி

ஆனால் 6 கோடி ரூபாய்க்கு தான் விற்க முடிந்தது என கூறி பண மோசடி செய்துள்ளார். இதற்கு அவரின் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். அழகப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

4 பேர் கைது; ஜாமினில் வெளியே வந்தனர்

இதுகுறித்து சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கேரளம் மாநிலம், திருச்சூரில் தலைமறைவாக இருந்த அழகப்பன்(66), அவரது மனைவி நாச்சாள்(60), மகன் சிவா(35), மருமகள் ஆர்த்தி(33) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.

அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

இந்த நிலையில், இந்த மோசடி தொடர்பாக சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த 17-ம்தேதி அழகப்பனுக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் பெற, நடிகை கவுதமிக்கு 'சம்மன்' அனுப்பினர். அவரும், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

4 பேர் கைது; 3 பேர் சிறையில் அடைப்பு

இதையடுத்து அழகப்பன், நாச்சாள், சிவா மற்றும் ஆர்த்தி ஆகியோரை நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைக்குழந்தையுடன் இருப்பதால், நீதிமன்றத்தால் ஆர்த்தி ஜாமினில் விடப்பட்டார். மற்ற 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.