சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க. அரசு 100 நாட்களைக் கடந்துள்ளது அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை. மாற்றம் வரும் என்று சொன்னார்கள். சட்டசபை நடைபெறாத கடந்த 4 நாட்களிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்துள்ளன. இதுதான் அந்த மாற்றமா? மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டார்கள் இளைஞர்கள். இன்று இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அந்த குற்றவாளிகளுக்கு கர்நாடக அரசு உச்சபட்ச தண்டனையை அளிக்க வேண்டும். இதைத்தான் இந்த 100 நாட்களில் பார்த்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டசபை நடந்து வருகிறது. சட்டசபைக்குள் தனிமனித தாக்குதலும் ஒரு கட்சி மற்றொரு கட்சியிடம் வாக்குவாதம் செய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.
முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ள கூடுதல் பயிர் கடன் தள்ளுபடி என்பது யானை பசிக்கு சோளப்பொறி போல் தான் இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் தான் முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.