தமிழக செய்திகள்

சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்

ஆடி மாதம் நாளை (வெள்ளிக்கிழமை) பிறக்க உள்ளது.

சென்னை,

பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவு, ஆவணப்பதிவுகள் நடைபெறும். இதையொட்டி அன்றையதினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆடி மாதம் பிறக்க உள்ளது. ஆடி மாதத்தில் பத்திரப்பதிவுகள் சற்று குறைவாகவே நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே ஆனி மாதத்தின் கடைசி நாளான இன்று (வியாழக்கிழமை ) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களிலும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பத்திரப்பதிவு துறைக்கு சென்றுள்ளது.

அதன் அடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்படும். மேலும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு, கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.