தமிழக செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மே 12-ம் தேதி முதல் 2026-2027-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஜூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இசைப்பள்ளியில் 3 ஆண்டுகள் படித்து முடித்த மாணவர்கள் இசைக் கல்லூரிகளில் நேரடியாக பட்டயப் படிப்பில் 3-ம் ஆண்டு சேரலாம்.

அனைத்து மாணாக்கர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேரப் பள்ளியாகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.

பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தி அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச்சலுகை உண்டு.

தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, டி.சவேரியார்புரம், மேலூர், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி என்ற முகவரியிலோ அல்லது 9487739296 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மே 12-ம் தேதி முதல் 2026-2027-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.