சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகின்ற 21-ந் தேதி (நாளை) நடைபெற இருக்கும் உங்கள் தொகுதிகளின் இடைத்தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை, அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் அளித்திடக் கேட்டு, உங்களை நேரில் சந்திக்க நாங்கள் வந்திருந்த நேரம், நீங்கள் அளித்த பாசமிகு வரவேற்புக்கு நன்றி கூறி மகிழ்கிறோம்.
எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் 2 தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், எங்கள் இருவருக்கு மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனுக்கும், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனுக்கும், அவர்களோடு தேர்தல் பணியாற்றிய கட்சித் தொண்டர்கள் வழங்கிய ஒத்துழைப்பும், வரவேற்பும் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு முன்னறிவிப்புகளாக இருந்தன. இத்தகைய பேரன்புக்குரிய வாக்காளப் பெருமக்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
விக்கிரவாண்டி தொகுதியிலும், நாங்குநேரி தொகுதியிலும் நீங்கள் பெருவாரியான எண்ணிக்கையில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும்போது, அது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்திடும்.
ஜெயலலிதாவின் மீது பொய் வழக்கு போட்டு அவரை தாங்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கியவர்களை அரசியல் ரீதியாக தண்டிக்க தேர்தல் களம்தான் சரியான வாய்ப்பு. உங்கள் பொன்னான வாக்குகளை எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமும், ஜெயலலிதா பாதுகாத்த ஒப்பற்ற சின்னமுமான இரட்டை இலைச் சின்னத்தில் பதிவுசெய்வதன் மூலம், ஜெயலலிதாவின் அகால மரணத்துக்கே காரணமானவர் களை நீங்கள் அரசியல் ரீதியாக தண்டிப்பீர்கள் என்பது எங்களது உறுதியான நம்பிக்கை.
அரசின் வலிமையை உறுதி செய்யும் வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நீங்கள் மகத்தான வெற்றியடையச் செய்யும்போது, அது அரசு நிர்வாகத்தையும், நலத்திட்டப் பணிகளின் செயலாக்கத்தையும் மேலும் பொலிவுடையதாக்கும் என்பதால்தான் உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
தேர்தல் களத்தில் நம்மை எதிர்ப்போர் யார் என்று பாருங்கள். எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும். குடும்ப அரசியலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஒரே கொள்கை கொண்ட கூட்டமே நம்மை எதிர்த்து நிற்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கும் தி.மு.க. ஆட்சியில் நடந்த அராஜகங்களையும், கட்டப் பஞ்சாயத்துகளையும், சாதிச் சண்டைகளையும், தமிழ்நாட்டையே முடக்கிப்போட்ட, இருள் பரப்பிய மின்வெட்டுகளையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
நில அபகரிப்பு, அரசு ஊழியர்கள் நிம்மதியாகப் பணியாற்ற முடியாத அச்சுறுத்தல், ஒரு குடும்பத்தின் அசுரப் பிடியில் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகமும் சிக்கித் தவித்த கொடுமை எல்லாம் இப்போது இல்லை. இப்போது நடைபெறுவது அன்பும், பாசமும், கருணையும் கொண்ட ஜெயலலிதாவின் அரசு.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது அன்புத் தொண்டர்களால் வழிநடத்தப்படும் உண்மையான மக்கள் அரசு. மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்ற எந்நேரமும் பாடுபடும் இந்த அரசு தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர். வளர்ச்சிக்கு வாக்களிப்பீர். வன்முறை கும்பலை புறந்தள்ளுவீர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.