சென்னை,
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைபெற்றுவந்த தீயசக்தியின் ஆட்சியை அகற்றி தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், உழைப்பால் உயர்ந்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவரும், மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து மறைந்தும் மறையாதவராக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் அ.தி.மு.க. 49 ஆண்டுகளை கடந்து வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொன்விழா காண இருக்கும் இத்திருநாளை கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா
அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை கொண்டாடும்விதமாக, கட்சியின் அமைப்புரீதியாக செயல்பட்டுவரும் மாவட்ட கழகங்களின் சார்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவிலான அனைத்து இடங்களிலும், எங்கு நோக்கிலும் கட்சி கொடிகள் கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கும்வகையில், கட்சியின் கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் உடனடியாக கொடிக் கம்பங்கள் அமைத்தும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்களுக்கு புது வண்ணங்கள் பூசியும், நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து விழாக்கோலம் பூண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
தற்காப்பு நடவடிக்கைகள்
மேலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கட்சியின் தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்சியின் பொன்விழா தொடக்கநாள் நிகழ்ச்சிகளில், ஆங்காங்கே பங்கேற்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.