தமிழக செய்திகள்

அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை

முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக சதீஸ்குமார் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி குமாரபுரத்தை சேர்ந்தவர் சதீஸ் குமார்(வயது 26). அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி துணை செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், மதுரைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு தனது காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் டி.வி.ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள அவருடைய தோட்டத்தில் சதீஸ்குமாரின் கார் நின்று கொண்டிருந்தது. அதன் அருகே சதீஸ்குமார் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சதீஸ்குமாரின் உடல் கிடந்த இடத்தில் இருந்த அவருடைய 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக சதீஸ்குமார் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரைக்கு செல்வதாக கூறி சென்ற சதீஸ்குமாரை கொலையாளிகள் கடத்தி சென்று வேறு இடத்தில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை காரில் கொண்டு வந்து அவருடைய தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT