தமிழக செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அண்ணாநகர் டவர் இன்று திறப்பு..!

அண்ணாநகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள டவர் பூங்கா இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக 'டவர்' பூங்கா திகழ்ந்து வந்தது. பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர்.

இந்த நிலையில், காதல் தோல்வி அடைந்த ஒரு சில காதலர்கள் இந்த டவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு முதல் கோபுரத்தின் மேல் ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் கோபுரத்தின் மேலே செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டது.

மேலும், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டது.

குறிப்பாக, கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோபுரத்தின் மேலே ஏறிச்செல்லும் போது கீழே தடுமாறி விழுந்திடாத வகையில் இவை அமைக்கப்பட்டு உள்ளது. கோபுரத்தின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், பூங்கா சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (20ம் தேதி) திறந்து வைக்கப்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அண்ணாநகர் டவர் பூங்காவில் பேட்மிட்டன் மைதானம், நடைபயிற்சிக்கான இடம், குழந்தைகள் விளையாட்டு திடல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் எண்ணத்துக்கு ஏற்ப புதுப்பிக்கும் பணிகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். இந்த டவரின் மேல் பகுதிக்கு சென்று மக்கள் சென்னை அழகை ரசிக்கலாம்,' என்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்