சென்னை,
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு தேர்வு எப்போது நடைபெறும் என்பதை 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்த அவர் கூறியதாவது; கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். 12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.