தமிழக செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு... தவெக- காங்கிரஸ் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி

எங்களுக்கு காங்கிரஸ் கட்சி தான் பெரிது என்று அமைச்சர் ராஜேஷ் குமார் பேசி இருந்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி நடத்திய பேச்சுவார்த்தையில் த.வெ.க.-காங்கிரஸ் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தான் பெரிது

2029 நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் த.வெ.க.- காங்கிரசாரிடையே மோதல் போக்கு உருவாகியது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், "எங்கள் தலைவர் ராகுல்காந்தி 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக வருவார். ஒருவேளை த.வெ.க. அதற்கு உடன்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும், அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம், எங்களுக்கு காங்கிரஸ் கட்சி தான் பெரிது" என்று பேசி இருந்தார்.

அமைச்சர் ராஜேஷ்குமாரின் இந்த பேச்சு த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், தனது சமூக வலைத்தள பக்கத்தில், சிங்கம் யானை நரி என ஒரு குட்டிக்கதையை பகிர்ந்து சிங்கமும், யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது புரிந்து கொண்டனர் என்று இந்த சலசலப்பை முடித்துக் கொள்ளும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

இந்த நிலையில், நாடாளுமன்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத் தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, எம்.பி.க்களாக இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்யை தனியாக சந்தித்து பேசி உள்ளனர்.

அப்போது, கூட்டணியின் ஒற்றுமைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது என்றும், தொண்டர்கள் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் பேச வேண்டாம் என்றும் காங்கிரஸ் டெல்லி மேலிடம் கூறியதை முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் விஜய், 'கூட்டணி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' எனக் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT