கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் பாதிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும், வேதனையையும் சந்தித்து வருகின்றனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும், வேதனையையும் சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறுபுறம். "உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி" என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.