தமிழக செய்திகள்

ரூ.75 ஆயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை,

விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.50,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமென கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு விவாசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யால் 25.05.2026 தேதியில் ரூ.50,000/- வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்திரவிட்டதற்கிணங்க, மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

ரூ.6,000 கோடி தள்ளுபடி

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

14,43,504 விவசாயிகள் பயன்

கடன் தொகை ரூபாயில் குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கான தள்ளுபடி (ரூபாயில்)

* 75,000 வரை கடன் தொகை முழுவதும் (100%)

* 75,000 க்கு மேல் 35,000

இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000/-மும் குறைந்தபட்சமாக ரூ.35,000/-மும் பணப்பயன் கிடைக்கும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

* 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி

* 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி

* 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி

* ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DIPR - P.R.NO.234 - Hon'ble CM Press Release - Cooperative Bank Crop Loan Waiver for Farmers - Date 16.06.2026.pdf
Preview