சென்னை,
அனைவரும் பாராட்டும் வகையில் திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வேளாண் நிதி அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் அமைச்சர் வினோத் சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றினார். காலை 9.31 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர் வினோத் 11.38க்கு உரையை நிறைவு செய்தார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.