சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக்கொள்ளும் என்ற அறிவிப்பு எதை குறிக்கிறது? விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநில தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.
இந்த முடிவின் பொருள் பா.ஜ.க. அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படி தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள்.
இடைத்தேர்தல்களில் தோல்வியை சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார்களே, அதுபோலத்தான் இந்த முடிவு. மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பா.ஜ.க. அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.