தமிழக செய்திகள்

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.

சேலம்,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த தினத்தை அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பொன் விழா ஆண்டிலும் அதிமுக ஆட்சியை பிடித்து சாதனை படைக்கும் என்று தெரிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மாவட்ட கட்சி அலுவலகங்களில் அதிமுக கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் இன்றைய தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT