தமிழக செய்திகள்

பாளையங்கோட்டை வாக்குச்சாவடியில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு

தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை,

தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி 11 மணி நேரம் நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 26, 27-ல் வாக்குகள் பதிவான நிலை குறித்து விசாரிக்க அதிமுக முன்னாள் பகுதி செயலாளரின் மகன் சங்கர் என்பவர் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ரத்தக் காயங்களுடன் அவர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து அவரை போலீசார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வாக்குச்சாவடி அருகே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் அங்கு மது அருந்தி கொண்டிருந்ததாகவும், அப்போது இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.