தமிழக செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கை சரிதான் - சென்னை ஐகோர்ட்

சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏக்களை மன்னித்து கடிதம் அளித்துவிட்டதால் தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த மே 13ம் தேதி தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தது. இதில், அதிமுக கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக, அக்கட்சியின் 25 எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். அவர்களுக்கு எதிராக, தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்து உள்ளதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெற்று கொள்வதாக, சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் அளித்தார்

இதை ஏற்று சபாநாயகர், 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரிதான். சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏக்களை மன்னித்து கடிதம் அளித்துவிட்டதால் தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது எனவும் தெரிவித்த ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.