சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும். த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என தெரிகிறது.
மேலும், பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த த.வெ.க.வில் இருந்து ஒருவர் தற்காலிக சபாநாயகராக இருக்க நேரிடும் என்பதால், அவரால் ஓட்டுபோட முடியாது. எனவே, த.வெ.க. ஆட்சியமைக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
மெஜாரிட்டி இல்லாத நிலையில் முறையான அரசு அமைக்க விஜய் முனைப்பு காட்டி உள்ளார். ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு தவெகவினர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தப் பிறகு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "இது சந்திப்பு அல்ல. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி. தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது" என்று தெரிவித்துள்ளார்.