சென்னை,
சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இசட்ஏ 1420 (ZA 1420) என்ற ஹெலிகாப்டர் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை கவனித்த விமானி உடனே சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டரை அவசர அவசரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து கோளாறு குறித்து பயிற்சி நிறுவனத்துக்கு விமானி தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வந்து ஹெலிகாப்டரை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டரை பார்வையிட்டு செல்கின்றனர். இயந்திரக் கோளாறை சரிசெய்ய வந்த 3 ஹெலிகாப்டர்கள் ஒரு மணி நேரமாக வானில் வட்டமிட்ட நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கி, உபகரணங்களை இறக்கிவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.