கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுதலை

போராட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 57 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வேண்டும் என மெரினா கடற்கரையில் சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி போராட்டம் நடத்தினர். பின்னர் ஜனவரி 15ம் தேதி தடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

இதனை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை (ஜனவரி 16ம் தேதி) இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து தடையை நீக்கி ஜல்லிக்கட்டினை நடத்த வேண்டும் என விடிய, விடிய அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் அலங்காநல்லூர் போராட்டத்திற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் திரண்டு (ஜனவரி 17ம் தேதி) போராட்டம் நடத்தினர். பீட்டாவைத் தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். முதலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் தொடங்கிய இந்த போராட்டம் சமூக வலைதளங்கள் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுடன் பெரும் போராட்டக்களமாக மாறியது.

போராட்டம் தீவிரம் அடைந்ததால் அன்றைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது மத்திய அரசு, 'ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்' என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 21.01.2017 அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது. ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன.

அப்போது அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் 2018-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்பு மாநாடு மதுரையில் நடந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர், வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்'என்று அறிவித்தார். ஆனால், சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படமால் இருந்தது.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரி நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மாவட்ட கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.