தமிழக செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி; 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஆகிய கிராமங்களில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இதனை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா வாடிவாசலில் நடந்தது. இதற்காக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம் மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.

இதற்காக இன்று மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும், சீரான உடற்தகுதி உள்ளவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குறைந்தது 150 செ.மீ. உயரமும், உயரத்திற்கு ஏற்ற எடையும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 மருத்துவர்கள் கொண்ட 10 மருத்துவ குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேர்வில் மொத்தம் 876 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் 28 பேர் நிராகரிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT