தமிழக செய்திகள்

எழும்பூரில் இருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

எழும்பூரில் இருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுசீரமைப்பு பணி

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. அதேபோல், தென்மாவட்டங்களிலிருந்து எழும்பூர் வரும் ரெயில்கள் தாம்பரம் மற்றும் மாம்பலம் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே முறையான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

வழக்கம்போல் இயக்கம்

இந்தநிலையில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இன்று (புதன்கிழமை) முதல் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. அதேபோல, பிற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கே வந்தடையும்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரெயில்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, தற்போது அனைத்து ரெயில்களும் வழக்கம் போல் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடை முறை தொடரும்' என்றனர்.