தமிழக செய்திகள்

கள்ள ஓட்டு போடுவதாக புகார்: சென்னை ஆழ்வார்பேட்டையில் பாஜக - திமுகவினர் இடையே தள்ளமுள்ளு

அடையாள அட்டை இல்லாமல் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதி ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் பள்ளி அமைக்கப்பட்டுள்ள 13-வது வாக்குச்சாவடியில் அந்த தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜக- திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார். இதற்கு திமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். வாக்குச்சாவடிக்குள் இருந்த சந்தேக நபரை போலீசார் வெளியேற்றாத நிலையில் துணை ராணுவத்தினர் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.