சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
“தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ரூ.59.05 கோடியை நெல்லை மாநகரத்தில் 7 கி.மீ தொலைவுக்கு தாமிரபரணி ஆற்றின் கரைகளை அழகுபடுத்தும் பணிகளுக்காக செலவிட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தி காப்பாற்றுவதற்காக செலவிடப்பட வேண்டிய நிதியை, தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில், நெல்லை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கருப்பந்துறை முதல் மணிமூர்த்தீஸ்வரம் வரை சுமார் 7 கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றங்கரை பகுதி ஐந்து தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் படித்துறைகள், பூங்காக்கள், நடைபாதைகள், மக்கள் அமரும் இடங்கள், உணவகம் ஆகியவை ரூ.59.05 கோடியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஜெர்மனியின் KfW வளர்ச்சி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்படுகிறது.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தாய்க்கு உடனடியாக மருத்துவம் தேவைப்படும் சூழலில், பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கி பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தால், அது எவ்வளவு அபத்தமான செயலாக இருக்குமோ, அதேபோல் தான் தாமிரபரணியைக் காக்கும் விவகாரத்தில் அரசின் அணுகுமுறையும் உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொதிகை மலையில் பிறக்கும் தாமிரபரணி ஆறு, மூலிகை வனங்களைக் கடந்து பயணிப்பதால் அது நோய்களைப் போக்கும் ஆறாக திகழ்ந்தது. ஆனால், இப்போது நோய்களை பரப்பும் நோயாக மாறி விட்டது. இதற்கு காரணம் கழிவுகளைக் கலக்கச் செய்வதில் தொடங்கி, அனைத்துச் சீரழிவுத் தாக்குதல்களும் தாமிரபரணி ஆற்றின் மீது தொடர்ந்து நடத்தப்படுவது தான். தாமிரபரணி ஆற்றைக் காக்க வேண்டும் என்பதற்காக முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர், 2018-ஆண்டில் தொடர்ந்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் தீர்ப்பளித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதியரசர் புகழேந்தி ஆகியோர் ‘‘தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னெற்றமும் ஏற்படவில்லை.
சீரழிவை எதிர்கொண்டு வரும் தாமிரபரணி ஆற்றை கடந்த ஆண்டு ஆய்வு செய்த நீதிபதிகள், திருநெல்வேலி மாநகரில் உருவாகும் கழிவுகள் எதுவும் ஆற்றில் கலக்கக் கூடாது; அதற்கு வசதியாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆணையிட்டனர். ஆனால், அதற்கும் எந்த பயனும் இல்லை. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக தாமிரபரணி ஆற்றை நேரில் ஆய்வு செய்த நான், தாமிரபரணியை காக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனாலும் பயனில்லை. இந்த விவகாரத்தில் அரசின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றம், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படுபவரான இராஜேந்திர சிங் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அவரும் சில மாதங்களுக்கு முன் தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்து விரைவில் வரைவு அறிக்கை தயாரித்துத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இத்தகைய சூழலில், தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகையை தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்காக மட்டும் தான் அரசு பயன்படுத்த வேண்டும். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் மொத்தம் 23 இடங்களில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகள் கலக்கின்றன. அதுமட்டுமின்றி, நெல்லை மாநகரத்தில் இருந்து தாமிரபரணியில் சங்கமமாகும் 4 பெரிய கால்வாய்களில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் திடக்கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும் 200 டன் திடக்கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கின்றன. இதைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள நிதி தான் பெருந்தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது நிதி கிடைத்துள்ள நிலையில், அந்த நிதியை ஆற்றை தூய்மைப்படுத்துபதற்கு பயன்படுத்தாமல் அழகுபடுத்த பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகளைத் தடுத்து, அந்த ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை அழகுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை ரூ.59 கோடி அல்ல.... ரூ.590 கோடியில் அழகுபடுத்தினாலும் அங்கு யாரும் செல்ல மாட்டார்கள். நெல்லை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் ஆற்றின் படித்துறைகள் சேதமடைந்திருப்பது உண்மை தான். அவற்றை மட்டும் இடிந்து கற்களைக் கொண்டு சில லட்சங்களில் மாநகராட்சியே சரி செய்ய வேண்டும். ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட ரூ.59.05 கோடியையும் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகளை கலப்பதை தடுத்து, தூய்மைப்படுத்துவதற்காக மட்டும் தான் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.
நெல்லை நகருக்கு வெளியில், பாபநாசத்தைக் கடக்கும் போது, அங்கு திதி என்ற பெயரில் ஆண்டுதோறும் 100 டன் பழைய துணிகள் வீசப்படுதல், சேரன்மாதேவி பகுதியில் 25 லட்சம் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கவிடப்படுதல் உள்ளிட்ட சீரழிவுகளைத் தடுக்கவும் தனித் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.