சேலம்,
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரபு (வயது 39). வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய அக்காள் மகள் ஷாலினியை (22) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் பிரபு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவருடைய மனைவி ஷாலினியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தன்னுடைய கணவர் கொலை செய்யப்பட்டதாகவும், தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து இந்த கொலையை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஷாலினி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நான், பி.பி.ஏ. பட்டதாரி, கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர் ஒருவரை காதலித்தேன். எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு வேறு ஒரு நபரை காதலித்தேன். அதற்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே என்னை, தாய்மாமன் பிரபுவுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு எனக்கும், என்னுடைய கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் அதிக ஆர்வம் எனக்கு உண்டு. இதன்மூலம் ஏராளமான ஆண் நண்பர்கள் எனக்கு உள்ளனர். நான் எப்போதும் செல்போனில் இருப்பதை என்னுடைய கணவர் கண்டித்து வந்தார். அதனை நான் கண்டுகொள்வது கிடையாது. இதனால் என்னிடம் இருந்த செல்போனை அவர் பறித்துக் கொண்டார்.
கணவருக்கு தெரியாமல் நான் ஒரு செல்போன் வாங்கினேன். அப்போதுதான் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த அப்பு எனக்கு அறிமுகம் ஆனார். ஓட்டல் தொழிலாளியான அப்புவும், நானும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம்.
சாதாரண நண்பர்களாக இருந்த எங்களது உறவு நாளடைவில் கள்ள உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டோம். என்னுடைய பெற்றோர் வீடு நாமக்கல்லில் இருப்பதால், நான் அங்கு செல்வதாக கூறி விட்டு அப்புவுடன் சென்று விடுவேன். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளோம்.
நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் என்னுடைய கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்றேன். அதற்கு அப்புவும் சம்மதம் தெரிவித்தார். எங்களது திட்டத்தின்படி கடந்த 2-ந் தேதி இரவு அப்பு எனது வீட்டுக்கு வந்து வீட்டு மாடியில் பதுங்கி இருந்தார். இரவு 10.30 மணி அளவில் என்னுடைய கணவர் பிரபு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கினார்.
நள்ளிரவு 1.30 மணி அளவில் நான், அப்புவை வரவழைத்து பிரபுவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினோம். பின்னர் ஒரு துணியை எடுத்து அவரது மூக்கையும், வாயையும் அமுக்கினோம். சிறிது நேரத்தில் பிரபு மூச்சுத்திணறி இறந்தார். நான் உடனே அப்புவை அங்கிருந்து தப்பி செல்லும்படி கூறினேன்.
சிறிது நேரம் கழித்து நான் என்னுடைய மாமியாரை அழைத்து பிரபு மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறார் என்று கூறினேன். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்சு வரவழைத்தோம். தகவல் அறிந்து போலீசாரும் வந்தனர். அவர்களிடம் மர்மநபர்கள் வந்து என்னுடைய கணவரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்ததாக நாடகம் ஆடினேன். இவ்வாறு வாக்குமூலத்தில் ஷாலினி கூறியுள்ளார்.
பின்னர் ஷாலினி கொடுத்த தகவலின்பேரில் சேலத்தில் பதுங்கி இருந்த அவருடைய கள்ளக்காதலன் அப்புவை போலீசார் கைது செய்தனர்.