தமிழக செய்திகள்

தூத்துக்குடி கோவில் கொடை விழாவில் தகராறு; இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது!

கோவில் கொடை விழாவின் போது இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் – அத்திமரப்பட்டி சாலையில் உள்ள பொன் இசக்கியம்மன் கோவில்யில் தற்போது கொடை விழா நடைபெற்று வருகிறது. விழா நேரத்தில் அத்திமரப்பட்டி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் சதீஸ்குமார் (24) மற்றும் ஒரு இளைஞர் கும்பலுக்கிடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பல் சதீஸ்குமாரை அத்திமரப்பட்டி கழிவு வாய்க்கால் அருகே அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தப்பியோடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடத்திய நிலையில், முத்தையாபுரம் பாரதிநகரைச் சேர்ந்த மரிய தினேஷ், விக்னேஷ் மற்றும் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.