சென்னை,
ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை மீண்டும் திறந்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை உடனடியாக மீண்டும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும் சேலம் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இச்சிலையை திறப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்திய தலித் மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் இச்சிலையை திறந்து வைத்துள்ளது.
இதனால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பினர், சிலையை உடனடியாக மூட வேண்டும் என்று மீண்டும் பலமான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு சாதிய மனப்பான்மையுடன் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, சிலை திறந்து வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சாதிய மனநிலையுடன் கூடியவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் துணியால் மூடி அடைத்துவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில், அம்பேத்கர் சிலைக்கு இழைக்கப்பட்ட சாதிய ரீதியான இந்த அநீதிக்கு எதிராக உடனடியாக சிலையை திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய தலித் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதும், தலித் பகுதியை சேர்ந்த சிலரைக் கைது செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை உடனடியாக திறந்து வைத்திட வேண்டும். சட்டவிரோதமாக சிலையை மூடிய அரசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், சாதிய மனநிலையோடு சிலையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதிக்காகப் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.