தமிழக செய்திகள்

சென்னை வரும் அமித்ஷா.. காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் - மாணிக்கம் தாகூர் அழைப்பு

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற தலைவர் ராகுல்காந்தி கேள்விக்கு உள்துறை அமைச்சர் பதில் சொல்ல இதுவரை முன்வரவில்லை.

சென்னை,

நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் போது, மாலை 5.00 மணியளவில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தொகுதி மறுவரையறை

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதில் தீவிரமாக உள்ளனர். சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய ஜூலை 20 அன்றே நாடாளுமன்றத்தை நோக்கி பெருந்திரளாக திரண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. அரசு பயங்கரமான வன்முறை தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் உத்தரவிட்டது யார் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அந்த பதிலின் மேல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அதற்கான தொடர் போராட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தி வந்தார்.

அயோத்தி ராமர் கோயிலில் நடந்த நன்கொடை திருட்டுக்கு துணை போன ஆளும் பா.ஜ.க., மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற தலைவர் ராகுல்காந்தி கேள்விக்கு உள்துறை அமைச்சர் பதில் சொல்ல இதுவரை முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் தனது அறைக்கு வந்தும் அவைக்கே வராமல் ஓடி ஒளிந்தவர் தான் அமித்ஷா.

கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறையினரை ஏவிவிட்டு கொடூர தாக்குதல் நடத்தியதோடு, மக்களவை தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் போது, நாளை (புதன்கிழமை) மாலை 5.00 மணியளவில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எனது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரலை அமித்ஷாவுக்கு உணர்த்துகின்ற வகையில் அணி திரண்டு வரும்படி அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.