தமிழக செய்திகள்

தமிழகம் வருகிறார் அமித்ஷா: திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்கிறார்

9-ந்தேதி திருவண்ணாமலை சென்று, கோவிலில் தரிசனம் செய்கிறார்.

புதுச்சேரி,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி போலீஸ் துறைக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் புதுச்சேரி வருகிறார். இதற்காக, டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் அவர், ஹெலிகாப்டர் வாயிலாக அன்று மாலை, 4:55 மணிக்கு புதுச்சேரி செல்கிறார்.

புதுச்சேரி கடற்கரையையொட்டி உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அன்று இரவு தங்குகிறார். அதன்பின், 9ம் தேதி காலை, 8:10 மணிக்கு புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் விழாவில், போலீசாருக்கு ஜனாதிபதி விருதை அமித் ஷா வழங்குகிறார்.

அந்த விழாவிற்கு பின், காலை 10:50 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக திருவண்ணாமலை சென்று, கோவிலில் தரிசனம் செய்கிறார். ரமணர் ஆசிரமத்துக்கும் செல்கிறார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.