தமிழக செய்திகள்

அமித்ஷா வருகை எதிரொலி: மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா வாகனங்களுக்கு தடை

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களை மத்திய மந்திரி அமித்ஷா இன்று பார்வையிடுகிறார்.

மாமல்லபுரம்,

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாமல்லபுரத்திற்குள் வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

தென் மாநில முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அதன்பிறகு மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களை பார்வையிட உள்ளார். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு நோட்டீஸ்

இந்த குறிப்பிட்ட நேரங்களில் சுற்றுலா பயணிகள் யாரும் மாமல்லபுரம் வரவேண்டாம் என தொல்லியல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தடை குறித்து மாமல்லபுரம் புராதன சின்ன நுழைவு வாயில்களில் தொல்லியல் துறை அறிவிப்பு நோட்டீசும் ஒட்டி உள்ளது.

முன்னதாக அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள், சுகாதார பணிகள், அவர் சுற்றி பார்க்கும் இடம், அவர் புகைப்படம் எடுக்கும் புராதன சின்னங்கள், பாரம்பரிய நினைவு சின்னங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அய்மன்ஜமால், மாவட்ட கலெக்டர் வீரப்பன் மற்றும் புதுடெல்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பாலாஜி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, தொல்லியல் துறை அலுவலர் ஸ்ரீதர், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், மாமல்லபுரம் நகராட்சி என் ஜினீயர் சுபாஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.