சென்னை,
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ். மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.ஏ. இவர்தான்.
தவெக ஆட்சி அமைக்க பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி இருந்த நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் எழுதி இருந்தார். அதன் பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு, மீண்டும், தவெகவுக்கு ஆதரவு அளித்தார்.
சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிருப்தியடைந்த டிடிவி தினகரன், அமமுகவிலிருந்து காமராஜை நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தார். தற்போது வரை தவெக அரசுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. காமராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரி அமமுக பொருளாளர் கரிகாலன் சபாநாயகரிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளார். தங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதுடன், கட்சி விதிகளை மீறியதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கரிகாலன் தெரிவித்துள்ளார்.