சென்னை,
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த 'புனித பீட்டர் பால்' கடல் உணவுப் பொருட் களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில், கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட 17 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி அலத்தி மகாராணா ஜூவாங்கா (வயது 29) நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 14 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் உள்ள சுமார் 2 டன் அமோனியா வாயுவை டேங்கர் லாரிகளில் பாதுகாப்பாக மாற்றி அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அம்மோனியா வெளியேற்றப்பட உள்ளதால் 500 மீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலையில் உள்ள சுமார் 2 டன் அளவிலான அம்மோனியாவை அகற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா அறிவுறுத்தி உள்ளார். முன்னெச்சரிக்கையாக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலையை சுற்றி இருக்கக்கூடிய 300 மீட்டர் பகுதியை சிவப்பு மண்டலமாகவும், 500 மீட்டர் பகுதியை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடிய கன்னிகைபேர் பஜார் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.