தமிழக செய்திகள்

ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு!

ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் என ரஜினிகாந்த் பேச்சு குறித்து அ.தி.மு.க. நாளேடு விமர்சித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில் நடந்த, உங்கள் நான் இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் `எல்லோர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராவார் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் முதல்வரானார்.

அதுக்கு அப்புறம் அவருடைய ஆட்சி இருபது நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழல. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும்" என கூறினார்.

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சுக்கு தற்போது அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேற்று, அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்தின் கருத்தைக் கண்டிக்கிறேன் என பகிரங்கமாகக் கூறினார்.

இந்நிலையில், அ.தி.மு.க கட்சியின் நாளிதழான 'நமது அம்மா', ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஆச்சரியம் பூச்சொரியும் எடப்பாடியாரும்...

சூசக ஆருடம் சொன்ன சூப்பர் ஸ்டாரும்...

என்ற தலைப்பில் குத்தீட்டி எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

`எடப்பாடியார் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்கள்கூட தாங்காது என்றார்கள். ஆனால் இன்று வரை சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்ற அதிசயம் நாளையும் நிகழும் என ரஜினிகாந்த், கமல் பிறந்தநாள் விழாவில் பேசியிருக்கிறார்.

ஆக, வினாக் குறிகளை வியப்புக் குறிகளாக மாற்றி கேள்விகளையும், கேலிகளையும் ஆச்சர்யங்களாக்கி எடப்பாடி நடத்துகிற நல்லாட்சி 2021-ம் தொடரும் என்பதைத்தான் நாளைக்கும் நடக்கப்போகிற அதிசயம் என்பதாக சூசக ஜோதிடத்தை சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கிறார் போலும்.

மொத்தத்தில் முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டிவிடுகிற கற்பனை நாற்காலிகள் அல்ல என்பதனை கமல்ஹாசனுக்கு, ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாகவே இக்கருத்து தோன்றுகிறது.

கூடவே, ``தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்படியார் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்" என்றும் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். உண்மைதான் உச்ச நட்சத்திரமே. கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள்.

ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கி கொள்பவர்கள்தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள்.

அப்படித்தான் எங்கள் எடப்பாடியாரும் படிப்படியாய் உழைத்து தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தை பதித்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக, அதன் பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும் தலைவனாக முடியும், தூய தமிழ் உலகை ஆளுகிற முதல்வனாக முடியும் என நிரூபித்து இருக்கிறார்.

இது, ஒரு சினிமாவில் நடித்து விட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்குள் முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிறது வரலாறு.

இதனை இலைமறை காயாக சுட்டி காட்டியிருக்கிறது உங்கள் பேச்சு அப்படித்தானே. எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும். நீங்கள் சுட்டி காட்டுகிற அதிசயம் இதுதான் என்பதை கல்வெட்டு சாட்சியாய் உரைக்கும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை