தமிழக செய்திகள்

தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா 2-வது அலை தமிழகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி வருகிறார்கள். இதன் காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், சிறப்பு மையங்கள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கடந்த மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:-

தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளது. 11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொண்டுவரப்பட உள்ளது. தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT