தமிழக செய்திகள்

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியர் பலி

மீஞ்சூர் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியர் பலியானார்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மீஞ்சூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மீஞ்சூர் 400 அடி சாலை அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து விழுந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மின்கம்பியை சீரமைக்க ரவிச்சந்திரன் அங்கு சென்றார்.

இந்நிலையில் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து ரவிச்சந்திரன் தவறி கீழே விழுந்தார்.

அந்த விபத்தில் அவரக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

SCROLL FOR NEXT