தமிழக செய்திகள்

கல்லூரி பேராசிரியர்கள் பணி நியமன தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திட வேண்டும் - மு. வீரபாண்டியன்

தகுதியுடையவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வுகளை எழுதினர்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அத்தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த 2708 பணியிடங்களுக்கு 42,064 பேர் எழுதிய தேர்வுகளில் 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளில் தான் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி பேராசிரியர்கள் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மொத்தம் இரு தாள்களையும், 3 பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். முதல் தாளில் ஏ, பி என இரு பகுதிகள் உள்ளன. அவற்றில் முதல் பகுதி தேர்வர்களின் தமிழ்மொழிப் புலமையை அறிவதற்கானது. 50 மதிப்பெண்களுக்கான அப்பகுதியில் 40 விழுக்காடு, அதாவது 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் போதுமானது. இதில் பெறப்படும் மதிப்பெண்கள் தரவரிசையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படாது. முதல் தாளின் பி பிரிவில் தேர்வர்களின் விருப்பப்பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்; அவற்றுக்கு தலா 1.5 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாவது தாளில் 5 தலைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்வு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு 50 மதிப்பெண்கள்.

தேர்வு முடிவுகள்

இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 40 விழுக்காடு மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 35 விழுக்காடு மதிப்பெண்களும் பெற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில் முதல் தாளின் பி பிரிவில் 111 மதிப்பெண்கள், அதாவது 74 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற பலருக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.

இரண்டாம் தாளில் கேட்கப்படும் 5 வினாக்களில் ஒன்றுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுத வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாடு பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்க்கப்படும். கேட்கப்படும் 5 வினாக்களில் தங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த ஒரு தலைப்பில் தான் தேர்வர்கள் கட்டுரை எழுதுவார்கள்.

பூஜ்ஜியம் மதிப்பெண்

அப்படி எழுதப்படும் கட்டுரைக்கு, அதுவும் விருப்ப பாடத்தில், 111 மதிப்பெண் எடுத்த ஒருவரால் எழுதப்படும் கட்டுரைக்கு, பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. தலைப்புக்கு பொருத்தமான ஓரிரு தகவல்களை எழுதினால் கூட குறைந்தது 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் வென்ற ஒருவர், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவுமே தெரியாதவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதன் பின்னணியில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

முறைகேடுகள்

முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இரண்டாம் தாளில் 98% மதிப்பெண் வழங்கப்பட்டதும் இயல்பானதாக தெரியவில்லை. இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதன்முறையாக நியமிக்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும்; தகுதியுடையவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வுகளை எழுதினர். அவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.