தமிழக செய்திகள்

தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: பாக்யராஜ் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்ததாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான திரைக்கதை, வசனம் மற்றும் நகைச்சுவை மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்து புகழ்பெற்றவர்.

பாக்யராஜின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.