தேனி,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-
தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் இன்று அதிகாலை 60 வயது பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
முந்தைய திமுக ஆட்சியில்கூட தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. ஆனால் தற்போதைய தவெக ஆட்சியிலோ குற்றச் சம்பவங்கள் ஒருபடி மேலே சென்று தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம், நகைகளைத் திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
தவெக ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தபோதும், மாற்றாக தொடர்ந்து குற்றங்கள் பெருகி வருவதே நிஜம். பொதுவாக சிங்கங்கள் அதிக நேரம் தூங்கும் இயல்புடையவை; பசித்தால் மட்டுமே இரை தேடும். அதுபோலத்தான் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பித்து வைத்த சிங்கப் பெண் படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது போலும். கணக்கு காட்ட வேண்டுமே என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்குகளைப் பதிந்து “நாங்களும் இருக்கிறோம்” என்று காட்டிக்கொள்ளும் அளவில்தான் அவர்களின் செயல்பாடு உள்ளதாகத் தெரிகிறது.
எனவே சிங்கப் பெண் படையை முழுவீச்சில் களமிறக்கி, சுறுசுறுப்புடன் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து குற்றங்களைத் தடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.