சென்னை,
பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம்., ஆய்வக தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தாமதமாகிவந்த நிலையில், கடந்த 4-ந் தேதி கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துணை மருத்துவப் படிப்புக்கான சிறப்புப் பிரிவு மாணவர்களுக்குரிய கலந்தாய்வு நேற்று நடந்தது. மொத்தம் 53 மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தநிலையில், 27 பேர் கலந்தாய்வில் பங்குபெற்றனர். அவர்களில் 23 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவ படிப்புகளை தேர்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வின் முதல் சுற்று இன்று தொடங்கி 15-ந் தேதி வரையிலும் (தரவரிசை 1 முதல் 7 ஆயிரத்து 59 வரை), 2-ம் சுற்று கலந்தாய்வு 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையிலும் (தரவரிசை 7 ஆயிரத்து 60 முதல் 17 ஆயிரத்து 78 வரை), 3-ம் சுற்று கலந்தாய்வு 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும் (தரவரிசை 17 ஆயிரத்து 79 முதல் 27 ஆயிரத்து 332 வரை), 4-ம் சுற்று கலந்தாய்வு 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையிலும் (தரவரிசை 27 ஆயிரத்து 333 முதல் 37 ஆயிரத்து 334 வரை) நடக்கிறது.