தமிழக செய்திகள்

தோழர் நல்லகண்ணு மறைவுக்கு அன்புமணி இரங்கல்

தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர் நல்லகண்ணு என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப்போராட்ட வீரருமான தோழர் நல்லகண்ணு முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு தமது பள்ளிப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கம் குறித்த தகவல்களை பள்ளி ஆசிரியர் மூலம் அறிந்து கொண்டு, அந்த இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்கள் எவ்வாறு எளிமையாக வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.

அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

தியாகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த அவர், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.

தோழர் நல்லகண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.