சென்னை,
தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி. தொகுதிகள் கிடைக்கும் என்றும், 2,000 கிராமங்களை நிர்வகிக்க முடியும் என்றும் அன்புமணி கூறியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது:-
அன்புமணி ராமதாஸ் அவர்களை... சிபிஐ வழக்கின் நெருக்கடியை கண்டு அஞ்சி, பா.ஜ.க அரசின் தொகுதி மறுவரையறைக்கு வக்காலத்து வாங்குவதற்காகவே இதுபோன்ற அடிப்படை புரிதலற்ற கருத்துகளை பேசுகிறீர்களா?
இங்கிலாந்து ஒரு ஒற்றையாட்சி முறை கொண்ட நாடு. அங்கு மத்திய நாடாளுமன்றமே முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறது. இந்தியாவை போல தனியாக சட்டமன்றங்களும், சுயாட்சி உரிமைகளும் கொண்ட 'மாநில அரசு' என்ற அமைப்பே அங்கு கிடையாது. இங்கிலாந்தில் கவுன்சில்கள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளே நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குகின்றன. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இங்கு மாநிலங்களுக்கு தனித்தனியான அதிகாரங்களும், உரிமைகளும், சட்டமன்றங்களும் வழங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் இந்த ஒற்றையாட்சி உள்ளாட்சி அமைப்பை உதாரணம் காட்டி, இந்தியாவின் மாநில உரிமைகளோடும் இந்திய நாடாளுமன்ற அமைப்போடும் ஒப்பிட்டு பேசுவது உங்கள் அடிப்படை அரசியலமைப்பு புரிதலற்ற தன்மையையும் அறியாமையையுமே காட்டுகிறது.
தமிழ்நாட்டிற்கு 59 இடங்கள் கிடைக்கும், 2,000 கிராமங்கள் மேலாண்மை செய்யப்படும் என்றெல்லாம் அன்புமணி கூறுகிறார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணி என்பது சட்டங்களை இயற்றுவதும் திருத்துவதும் மட்டுமே; திட்டங்களை நேரடியாக செயல்படுத்துவது எம்.பி.க்களின் வேலை அல்ல. உங்கள் கூட்டணி பா.ஜ.க அரசின் சர்வாதிகார போக்கால், எம்.பி.க்கள் தங்களின் அடிப்படை நாடாளுமன்ற கடமைகளைக்கூட சுதந்திரமாக செய்ய முடியாமல் முடக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டுமே!
பாரத பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் கண்ட கனவு அதிகாரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகும். மாநகராட்சிகளுக்கு, நகராட்சிகளுக்கு, பேரூராட்சிகளுக்கு, மாவட்ட ஊராட்சிகளுக்கு, ஊராட்சி ஒன்றியங்களுக்கு மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு தான் உண்மையான அதிகாரங்களும் நிதியும் வழங்கப்பட வேண்டும்; இதை ஒழுங்காக உங்கள் கூட்டணி கட்சியான பா.ஜ.க செய்ய விட்டாலே வளர்ச்சி பணிகள் தானாக நடக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு மாநில அரசுகளின் உரிமைகளை குறைப்பதிலும், அவற்றை ஒடுக்குவதிலுமே முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டு,எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது ஜனநாயகத்திற்கு எந்தப் பலனையும் தராது.
மீண்டும் மக்களவை எம்பி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் தர்மபுரி போன்ற இடங்களில் உங்களுக்கான ஒரு தொகுதி கைநழுவி போய்விட கூடாது என்பதற்காகத்தானே, தொகுதி எண்ணிக்கையை கூட்டி பெண்களுக்கு இன்னொரு சீட் தருவது போல பேசுகிறீர்கள்? பெண்களுக்கு உண்மையாகவே அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இப்போது தர்மபுரியை நடைமுறையில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலேயே உடனடியாக 33% இடஒதுக்கீட்டை கொடுத்துவிடலாமே, அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
ஏற்கனவே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மக்களவையில் பேச வாய்ப்பு கிடைக்காத சூழலில், 800-க்கும் மேற்பட்டஎம்.பி.க்களை கொண்டு வந்து நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் 'சீனா நாடாளுமன்றம்' போல முடக்க பார்க்கிறீர்களா? நடப்பு கூட்டத்தொடரில் அன்புமணி எத்தனை நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசினார்? பிரச்சினை எம்பிக்களின் எண்ணிக்கையில் இல்லை, நாடாளுமன்றம் செயல்படும் முறையில் தான் இருக்கிறது.
இப்போது உத்தரப் பிரதேசத்தில் 80 இடங்களும், தமிழ்நாட்டில் 39 இடங்களும் உள்ளன; இப்போதே இரண்டுக்கும் இடையே 41 இடங்கள் வித்தியாசம் இருக்கிறது. 50% இடங்கள் அதிகரிக்கப்படும் பட்சத்தில் உத்தரப் பிரதேசத்திற்கு 120 இடங்களாகவும், தமிழ்நாட்டிற்கு 59 இடங்களாகவும் மாறும். இதனால் உத்தரப் பிரதேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளி 41-ல் இருந்து 61 இடங்களாக இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்!
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் அரசியல் பலமும் பிரதிநிதித்துவமும் கடுமையாக சரிந்து, டெல்லியில் தமிழ்நாட்டின் குரல் பலமற்றதாக மாற்றப்படும் என்ற உண்மை உங்களுக்கு தெரியாதா?
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, மாநிலத்தை அதிகாரமற்றதாக்கும் இத்தகைய தொகுதி மறுவரையறை முறையை ஆதரிப்பவர்கள் அனைவரும் வரலாற்று துரோகம் இழைக்கும் 'எட்டப்பர்களே'! அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரவலாக்குவோம்; தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.