சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகளும் இருந்த நிலையில், 120 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி தொடர்ந்த வழக்கால், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சினேக பிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மகளிர் நீதிமன்றம் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அன்று முதல் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நள்விரவு சிறையில் இருந்த ஞானசேகரனுக்கு திடீரென கடுமையான வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட சிறைக்காவலர்கள் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
முதலுதவிக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கைதிக்கு திடீர் வலிப்பு ஏற்பட்ட சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.