சென்னை
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2 வருடங்களாக காலியாக இருந்தது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக துணைவேந்தர் தேடுதல் குழு நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கக்கோரி விண்ணப்பித்த 170 பேரில் 8 பேரை தேர்ந்தெடுத்து தேடுதல் குழு நேர்முகத்தேர்வு நடத்தியது.
அந்த 8 பேரில் பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் எச்.தேவராஜன், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன மெட்டீரியல் எனர்ஜி துறை கவுரவ பேராசிரியர் எம்.கே.சூரப்பா, சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.பொன்னுசாமி ஆகிய 3 பேர் பெயரை பட்டியலிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் தேடுதல் குழு ஒப்படைத்தது. அந்த 3 பேரிடமும் கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேர்காணல் நடத்தி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை அறிவித்தது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் துணை வேந்தராக நியமிக்கபட்டதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் துணை வேந்தர் நியமனம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும் - வெளிப்படையாகவும் நடைபெற்றது என கூறப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரிகள், மாணவர்கள் நலன் கருதி முடிவெடுக்கப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அதில் கூறப்பட்டு உள்ளது.