தமிழக செய்திகள்

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: அண்ணாமலை கண்டனம்

ப்ராஜக்ட் பணிக்காக சென்னை வந்த திருச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி மீதும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவியில் தெரிவித்திருப்பதாவது,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவமும் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இவை மக்களின் மனதில் ஆறாத காயமாக இருக்கும் நிலையில், தனது கல்வி தொடர்பான ப்ராஜக்ட் பணிக்காக சென்னை வந்த திருச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி மீதும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவியை, ஒரு கும்பல் மிரட்டி, காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரிலேயே, அதுவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திலிருந்து வெறும் பத்து நிமிட தூரத்தில், இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது.

தமிழகத்தில் நம் சகோதரிகள் மீது நடைபெறும் ஒவ்வொரு பாலியல் வன்கொடுமையும், இந்த கையாலாகாத திமுக அரசின் கீழ், சட்டம், ஒழுங்கு எவ்வளவு செயலிழந்து போய் விட்டது என்பதை, வேதனையுடன் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.