தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த மூன்று தினங்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தார் அண்ணாமலை. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் ஆகியோரை சந்தித்தார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக இன்று பாஜக தேசிய தலைமை அறிவித்தது. இதையடுத்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக இன்று உரையாற்றிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும் பொதுத்தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். அண்ணாமலை, தனது இயக்கத்தில் சேர்வதற்கான இணையதள முகவரியையும் தெரிவித்தார். அதில் உடனடியாக பலரும் சேரத் தொடங்கியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அதில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாஜகவைச் சேர்ந்த பலரும் ஆர்வத்துடன் அதில் இணைவதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை தனது புதிய இயக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதை அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
இதற்கிடையே, அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியது பற்றி விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு திருமாவளவன், ’’அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. புதிய கட்சி தொடங்கினால் அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.