தமிழக செய்திகள்

6 தொகுதிகளில் நாளை அண்ணாமலை பிரசாரம்

பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நாளை 6 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம், சேலம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (13.04.2026), பொதுமக்களை நேரில் சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

திமுக ஆட்சியின் பொய்கள், ஊழல், சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் தோல்வி உள்ளிட்ட தமிழகத்தின் அவலநிலைக்கு முடிவு கட்டும் நேரம் இது.

பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.