தமிழக செய்திகள்

திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

நேற்று விவசாயிகள், வாய்க்கால் பாசன அலுவலகத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும் என்று வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருமூர்த்தி அணை

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3-ம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் அறிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று விவசாயிகள், வாய்க்கால் பாசன அலுவலகத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தப் பாசனத்தை நம்பியுள்ளன. வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தால், வறட்சி மற்றும் குறைந்த மழை சூழலில் கடைமடை வரை பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படும்.

வலியுறுத்தல்

நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு, பணிகளைத் தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும் என்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, தவெக அரசு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT