தமிழக செய்திகள்

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

2 தொகுதிகளிலும் 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள்.

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளர்கள் யார்...?

அ.தி.மு.க. வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்டின் மகள் வக்கீல் உமா சங்கரியும் களம் இறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT